Jan 10, 2014

காவிரி தீர்ப்பாயத் தலைவர் நியமனம்



காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சவுகான் நியமிக்கப்பட்டுள்ளதற்கு காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்கம் செயலாளர் ரங்கநாதன் கூறுகையில், "உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் காவிரி தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி சவுகான் பெயரை பரிந்துரைத்துள்ளதையடுத்து, தீர்ப்பாயத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜூன் மாதம் நீதிபதி பதவியிலிருந்து சவுகான் ஓய்வுபெறுகிறார். அதனையடுத்து, அவர் தீர்ப்பாயத் தலைவராக பொறுப்பேற்பார்.
புதிதாக பதவியேற்கும் சவுகான் கடந்த 2007- ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம் மற்றும் மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்கள் மீது விசாரணை நடத்துவார்," என்று தெரிவித்தார்.
இதற்குமுன், இத்தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்த என். பி. சிங் உடல் நலம் காரணமாக கடந்த 2012 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவி விலகினார். அதன்பின்னர், இப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், நீதிபதி சவுகான் பதவியேற்கவுள்ளார்.

No comments: